தாரையின் மணாளனான பிரகஸ்பதியை மனதில் நிறுத்தி இங்கு சில ஜோதிட வரிகள். "ஆசைக்கு அளவில்லை; பேராசைக்கும் குறைவில்லை' என்பது மனித இயல்பு. ஏழை வீட்டில் பிறந்தவரும் பணக்காரராகிவிடும் கிரக நிலைகளை சற்று விளக்கிடவே குரு பணிக்கர் பெருமகனார் ஆசியுடன் முனைகின்றேன்.
எந்த லக்னத்தில் பிறந்தவரானாலும், 3, 6, 11-ஆம் வீட்டில் பாவகிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது அமைந்திருந்தால், ஏழை வீட்டில் பிறந்தவராயினும் நடுவயதிற்குள் பணக்காரராகிவிட முடியும். விபரீத ராஜயோக விதிப்படி ஒருவர் ஜாதகத்தில் பாவ கிரகங்கள் 3, 6, 8, 12-ல் மறைவது செல்வநிலைக்கு அனுகூல அமைப்பு. இதைத்தான் "திடீர் தனப்பிராப்தி' என்பர்.
சாதாரண குடும்பத்தில் பிறந்தவருக்குக்கூட 3-ல் சூரியன் மற்றும் செவ்வாய் அமர்ந்துவிட்டால், அரசாங்க உத்தியோகம், அரசு- அரசியல்வழி தனவரவு, புகழ், செல்வம் ஏற்பட்டுவிடும். 6-ல் செவ்வாய் நின்று அதை குருவோ சுக்கிரனோ பார்த்த அதிர்ஷ்டசாலிகள் அரசு டெண்டர், ரியல் எஸ்டேட், யூகவணிகம், உலோகத்தொழில் வகைகளில் பணக்காரராகிவிடலாம்.
பலருக்கு 6-ல் சனி நின்று லக்ன சுபரும் பார்த்தால், எப்படியும் எதிரியை வென்று லாபமடையும் யோகம் உண்டு. வங்கி மற்றும் மருத்துவத்தொழில் மூலமும், கௌரவப் பதவி மூலமும் செல்வம் தானாகச் சேர்ந்து பண முதலை ஆவார்கள். 11-ஆமிட செவ்வாய் சிலரை கட்டடத்தொழில், அரசு கான்ட்ராக்டுகள், நில அபகரிப்பு வகையில் திடீரென பெரும் செல்வந்தராக்கியிருப்பது வெள்ளிடைமலை.
ஏழையாகப் பிறந்தாலும் ஏற்றமிகு வாழ்வதனை குலதெய்வ அருளால் அடைபவர்கள் யார் எனக் கேட்டால், 4, 7, 9-ஆம் அதிபதிகள் மற்றும் சுக்கிரன் 9-ஆம் வீட்டிலோ, 11-ஆம் வீட்டிலோ நின்று, இக்கிரகங்களை சனி சேர அல்லது பார்க்க, சனி தசாபுக்திக் காலங்களில் தொழில் வகையில் திடீர்பணக்காரராகிவிடுவார்கள். படகு போன்ற காரும், கண்ணாடி மாளிகையும் பலருக்கும் கைகூடும். அடிப்படை விதி யாதெனில், பாக்கியாதிபதியுடன் சனி சேர்ந்து 11 அல்லது 9-ல் அமைந்தவர்கள் 30 வயதிற்குமேல் தனவந்தன் ஆகமுடியும் என்பதே. பொருள் வளம் (ஐர்ற் ஈஹள்ட் & நற்ஹற்ன்ள்) சுக்கிரன் மற்றும் குரு பெற்ற பலத்தின் அடிப்படை யில்கூட குறைய அமையும்.
சாமானியரும் வசதிவாய்ப்பை எப்போது எட்டமுடிகிறது என்றால், ஜாதகப்படி 9-க்குரியவர் தசையில் வரக்கூடிய 10-ஆம் அதிபதி புக்திக் காலங்களில் சுபப்பலன் விருத்தி, லாபம் அதீதமாக அனுபவமாகும். இந்த 10-ஆம் அதிபதி வக்ரம், அஸ்தமனம் அடையாமலிருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. பொதுவில் 10-க்குரியவர் தசையில் பாக்கியாதிபதி, யோகாதிபதிகளின் புக்தி நடக்கையில் திடீர் தனவரவுகள், சொத்து மதிப்பு கூடல், ரொக்கம் கையிருப்பு அதிகரிக்கத்தான் செய்கிறது பலருக்கும். 10-ஆம் வீட்டை குரு பார்த்தால் தன் முன்னோர்களைவிட அதிகம் சம்பாதித்து பெரும் பணக்காரராக முடியும்.
கொடுப்பினை, பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் இவற்றைக் குறிப்பிடக்கூடிய 9-ஆம் வீட்டில் மூன்றுக்கு மேற்பட்ட பலமான சுபகிரகம் அமர்ந்து, அவற்றுடன் பாக்கியாதிபதி சேர்ந்தாலோ அல்லது பார்த்தாலோ, ஜாதகர் வளர வளர பிறந்தது குடிசையானாலும் அது மாளிகையாக மாறிவிடும். 30 வயதிற்குள் மகாபாக்கியசாலியாகிவிடுவார். சகல சம்பத்தையும் அனுபவிக்கும் யோகம் குலதெய்வ அருளால் அமைந்துவிடும். 3, 5, 10-க்குடையவர்கள் சுபராகி தமக்குள் தொடர்பும் கொண்டால் வருங்காலத்தில் மன்னன் மாடத்து நிலவுதான்.
முடிவுரையாக, சாமர்த்தியமும் சாணக்கியத்தனமும் அதிகமாக உள்ளவர்களுக்குக்கூட மானிட வாழ்வு போராட்டம் நிறைந்த பூந்தோட்டமே.
5-ஆம் வீட்டில் 5-க்குரிய கிரகமும், 10-ஆம் வீட்டில் 10-ஆம் அதிபதியும் அமைந்தவர்களுக்கு அதிகாரப் பதவி, புகழ், அந்தஸ்து, சபை மரியாதைகள் பரம்பொருள் கொடுத்த வரம். வரும் சித்திரை (விளம்பி 2018-2019) முதல் வாசகர்களுக்கு பொருள் வளம் சிறக்கட்டும்.
செல்: 94431 33565